Archives: மார்ச் 2026

ஈஸ்டர் முரண்பாடு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின. செய்தி பரவியதால், சில தேவாலயங்கள் தங்கள் ஆராதனைகளைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டன. மக்கள் திகைத்து, பயந்து வீட்டிற்கு விரைந்தனர். அவர்களின் மகிழ்ச்சியான கொண்டாட்டம் சோகமாக மாறியது.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், ஈஸ்டர் இப்போது "ஈஸ்டர் குண்டுவெடிப்பு" என்று குறிப்பிடப்படும் அர்த்தமற்ற வன்முறையால் மாண்ட அன்புக்குரியவர்களின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது. ஆயினும்கூட துயரம், அப்பாவிகளின் படுகொலை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் சோகம் ஆகியவை உயிர்த்தெழுதலில் உள்ள முரண்பாட்டிற்கு அப்பட்டமான நினைவூட்டல்களே ஆகும். நாம் பிழைக்கும்படி இயேசு மரித்தார். நாம் ஒரு நாள் மரித்தாலும், அவருடைய ஜீவனில் பங்கடைவதால், நாம் மீண்டும் உயிர்த்தெழுவோம் என்பதையும் அறிவோம். அதுதான் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், பவுலின் கேள்வியை நாமும் நம்பிக்கையுடன் உறுதிப்படுத்தச் செய்கிறது, “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?" மேலும், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (வ.55-57) எனலாம்.

உயிர்த்தெழுதல் ஞாயிறு என்பது பாவம் மற்றும் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியின் கொண்டாட்டமாகும், மேலும் இது நாம் பெறக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. 4 ஆம் நூற்றாண்டின் சபை முற்பிதா ஜான் கிறிசோஸ்டம், "கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், நீ (மரணம்) தூக்கி எறியப்பட்டாய்! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், பேய்கள் வீழ்ந்தன! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், தேவதூதர்கள் களித்தனர்! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், ஜீவன் ஆள்கிறது! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், கல்லறையில் ஒருவர் கூட மரித்திருக்கவில்லை!" என்றார். எதிர்பாராத அல்லது காலத்திற்கு முன்னான இழப்பை நாம் சந்திக்கும்போது, இயேசு ஜீவிப்பதால் அவருடைய ஜெயமான உயிர்த்தெழுதலில் களிகூர முடியும் என்ற இந்த உறுதியையே மையமாகக் கொண்டு நமது நம்பிக்கை இருப்பதாக. 

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது. 

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28). இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள் "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே. 

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும். 

இயேசுவில் மறுமலர்ச்சி

லியோனார்டோ டா வின்சியை மறுமலர்ச்சியின் மனிதராக நாம் அறிவோம். அவரது அறிவாற்றல் திறன், பல படிப்புகள் மற்றும் கலைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், லியோனார்டோ பிரசித்தி பெட்ரா தனது வரிகளில் "நம்முடைய இந்த மோசமான நாட்கள்" என்றும், "மனிதர்களின் மனதில் நம்மைப் பற்றிய எந்த நினைவையும் விட்டுச் செல்லாமல்" நாம் இறந்துவிடுகிறோம் என்று புலம்பினார்.
"நான் வாழ கற்றுக்கொள்ளும்போதே, சாகவும் கற்றுக்கொள்கிறேன்" என்கிறார் லியோனார்டோ. அவர் புரிந்துகொண்டதை காட்டிலும் உண்மைக்கு அருகே இருந்தார். எப்படி மாிக்க வேண்டுமென்று கற்றுக்கொள்வதே வாழ்வுக்கான வழி. எருசலேமில் இயேசுவின் வெற்றி பவனிக்கு பின்இப்போது நம் குருத்தோலை ஞாயிறென்று கொண்டாடுகிறோம்; பார்க்கவும் யோவான் 12:12–19), அவர், " கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்" (வ. 24) என்றார். அவர் தனது சொந்த மரணத்தைப் பற்றி இப்படி பேசினார், ஆனால் நம் அனைவரையும் உள்ளடக்கியதாக அதை விரிவுபடுத்தினார்: "தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்" (வ. 25).
அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவுடன் "அடக்கம்" பண்ணப்படுவதை பற்றி, "மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்" (ரோமர் 6:4–5) என்று எழுதினார். அவரது மரணத்தின் மூலம், இயேசு நமக்கு மறுபிறப்பை வழங்குகிறார், அதுவே மறுமலர்ச்சியின் அர்த்தம். அவர் தனது பிதாவுடன் நித்திய வாழ்வுக்கான வழியை உருவாக்கினார். 

தேவனுடைய தற்போதைய மற்றும் நிரந்திர பிரசன்னம்

மிர்னாளினி சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு இருந்த கிறிஸ்தவ நண்பர்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை எப்படிக் கையாண்டார்கள் என்பதை அவள் மதித்தாள். அவர்கள் மீது கொஞ்சம் பொறாமைகூட அவளுக்கு இருந்தது. ஆனால் மிர்னாளினி அவர்கள் வாழ்ந்ததுபோல் வாழ முடியும் என்று நினைக்கவில்லை. கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு அதிக ஒழுங்குகளை கையாளவேண்டும் என்று எண்ணியிருந்தாள். இறுதியில் ஓர் கல்லூரி மாணவி, இயேசு அவளுடைய வாழ்க்கையை பாழாக்குகிற தேவனல்ல, மாறாக, வாழ்க்கையின் கடினமான தருணங்களில், அவர் நம்மோடிருந்து உதவிசெய்கிற தேவன் என்று அவளுக்கு உணர்த்தினாள். அதை புரிந்துகொண்ட மாத்திரத்தில், மிர்னாளினி, இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் அவளுக்கான தெய்வீக அன்பையும் ருசிக்க தீர்மானித்தாள்.

சாலொமோன் ராஜாவும் மிர்னாளினிக்கு இதேபோன்ற அறிவுரைகளை வழங்கியிருக்கலாம். இந்த உலகத்திற்கு அதன் பாடுகள் உண்டு என்பதை அவர் ஒப்புக்கொள்ளுகிறார். “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” (பிரசங்கி 3:1) என்றும் “புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு” (வச. 4) என்றும் பிரசங்கி சொல்லுகிறார். அதுமட்டுமல்ல, இன்னும் அநேகம் இருக்கிறது. தேவன் “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்” (வச. 11). உலகம் என்றால், தேவனுக்கு முன்பாக நாம் வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது.

மிர்னாளினி இயேசுவை விசுவாசித்தபோது (யோவான்-10:10), அவர் வாக்களித்த நிறைவான வாழ்க்கையை பெற்றுக்கொண்டாள். அதைக்காட்டிலும் மேலானவைகளையும் பெற்றாள். விசுவாசத்தின் மூலம் அவளுடைய இருதயத்தில் இருக்கும் நித்தியமானது (பிரசங்கி 3:11), பிரச்சனையில்லாத எதிர்காலத்தையும் (ஏசாயா 65:17) நித்தியமான தேவனுடைய பிரசன்னத்தையும் அடையாளப்படுத்துகிறது. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனுடைய நீதியும் கிருபையும்

பிரிட்டிஷ் ஓவியர் ஜான் மார்ட்டின் (1789-1854) நாகரிகங்களின் அழிவை சித்தரிக்கும் அபோகாலிப்டிக் நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றவர். இந்த அற்புதமான காட்சிகளில், மனிதர்கள் அழிவின் அளவைக் கண்டு வியப்படைகிறார்கள்; நெருங்கி வரும் அழிவுக்கு எதிராக பெலனற்றவர்களாக இருக்கிறார்கள். இவருடைய ஒரு ஓவியம், “நினிவேயின் வீழ்ச்சி,” இருண்ட உருளும் மேகங்களின் கீழ் பெருகிவரும் அலைகளின் அழிவிலிருந்து மக்கள் தப்பி ஓடுவதை சித்தரிக்கிறது.

மார்ட்டின் ஓவியம் வரைவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தீர்க்கதரிசியான நாகூம் நினவேக்கு விரோதமான நியாயத்தீர்ப்பை அறிவித்தார். தங்கள் சுய ஆதாயத்திற்காய் மற்றவர்களை ஒடுக்குகிறவர்களின் மீதான தேவ கோபத்தை அறிவிக்கும்பொருட்டு, மலைகள் நடுங்குவது, மலைகள் உருகுவது, பூமி நடுங்குவது போன்ற உருவகங்களை நாகூம் பயன்படுத்துகிறார் (நாகூம் 1:5). பாவத்திற்கான தேவனுடைய கோபாக்கினையில் கிருபை இடம்பெறாமல் இல்லை. தேவனுடைய வல்லமையைக் குறித்த மற்றவர்களுக்கு நினைவூட்டும் நாகூம், தேவனை “நீடிய சாந்தமுள்ளவர்” (வச. 3) என்றும் “தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்” (வச. 7) என்றும் சித்தரிக்கிறார். 

நியாயத்தீர்ப்பு செய்தியை வாசிப்பது கடினமாய் தோன்றலாம். ஆனால் தீமையை மேற்கொள்ளாத உலகம் பயங்கரமானதாக இருக்கும். நியாயத்தீர்ப்பு செய்தியோடு நாகூம் முடித்துவிடவில்லை. தேவன் ஒரு நல்ல மற்றும் நீதியான உலகத்தை விரும்புகிறார் என்பதை அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்: “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது” (வச. 15). அந்த நற்செய்தி இயேசுவாகும். அவர் பாவத்தின் விளைவுகளை சுமந்தார். அதனால் நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடிகிறது (ரோமர் 5:1, 6). 

 

ஞானமுள்ள மகிழ்ச்சியை கண்டறிதல்

தொற்றுநோய் ஜெயமெடுத்துக்கொண்டிருந்தது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற உறுதிபூண்டுள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர அறை மருத்துவருக்கு அப்படித்தான் தோன்றியது. அவர் எப்படி சிறந்ததை கொடுக்க முடியும்? அந்த சிரமத்தின் மத்தியில், பனிக்குமிழிகள் புகைப்படத்தை பெரிதாக்கி தன் மகிழ்ச்சியை தேடிக்கொண்டார். இது முட்டாள்தனமாய் தெரிகிறது என்று அந்த மருத்துவர் கூறுகிறார். ஆனால் சிறிய ஆனால் அழகான ஒன்றில் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்பது, “என்னுடைய சிருஷ்டிகரோடு பிணைக்கப்படுவதற்கும், ஒரு சிலரால் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் இந்த உலகத்தை பிரம்மாண்டமாய் பார்க்க நம்மை தூண்டுகிறது” என்று அந்த மருத்துவர் குறிப்பிடுகிறார்.

இந்த வழிகளில் மகிழ்ச்சியை தேடுவது என்பது, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நெகிழ்ச்சியை வளர்ப்பதற்கும் இந்த மருத்துவத் தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மருத்துவர் கூறுகிறார். அவர் “அனைவரும் மூச்சிவிடுவது அவசியம்; அதற்கு நேரம் ஒதுக்கி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்” என்று எல்லோருக்கும் ஆலோசனை கொடுக்கிறார்.

சங்கீதக்கான் தாவீது இந்த எண்ணத்தை சங்கீதம் 16 இல் வெளிப்படுத்துகிறார். “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்” என்றும் “ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்” (வச. 5,9) என்று குறிப்பிடுகிறார்.

தங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு இன்று மக்கள் பல வழிகளை கையாளுகின்றனர். ஆனால் இந்த மருத்துவரோ தன்னை சிருஷ்டிகருக்கு நேராய் திசை திருப்பும் ஞானமான மகிழ்ச்சியின் பாதையை கண்டுபிடித்தார். “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு” (வச. 11). அவரில் நாம் நித்திய மகிழ்ச்சியை சுதந்தரிக்கிறோம்.

 

தேவனுடைய பொறுமையான அன்பு

எங்களின் அழகான, பஞ்சுபோன்ற பூனைக்கு, வயிற்றைத் தடவி அதனுடன் விளையாடும் போதோ, மாலையில் அது என் மடியில் உறங்கும் போதோ, சில வருடங்களுக்கு முன்பு நாம் சந்தித்த அதே பூனை தான் அது என்று நம்புவது சில சமயங்களில் கடினமாக இருக்கும். எனது செல்லப் பூனை, எடை குறைவாகவும், அனைவருக்கும் பயந்தும் தெருக்களில் வாழ்ந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் நான் அதற்கு உணவு வைக்க ஆரம்பித்தவுடன் அது படிப்படியாக உருமாற்றம் அடைந்தது. ஒரு நாள் அது என்னுடைய செல்லப்பிராணியாய் மாறியது. மீதியெல்லாம் வரலாறே.

என் பூனையின் மாற்றம் பொறுமை மற்றும் அன்புடன் வரக்கூடிய சிகிச்சைமுறையின் நினைவூட்டலாகும். ஏசாயா 42-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய இருதயத்தை அது எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு, அவருடைய ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு ஊழியக்காரனைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது (வச. 1). அவர் தேவனுடைய நியாயத்தை பூமியிலே நிலைப்படுத்தும் வரை உண்மையாய் செயல்படுவார் (வச. 3-4).

அந்த ஊழியக்காரர் இயேசுவே (மத்தேயு 12:18-20). அவர் வன்முறையின் மூலமாகவோ அல்லது அதிகாரத்தைத் தேடுவதன் மூலமாகவோ தேவனுடைய நீதியை நிலைநாட்டமாட்டார். மாறாக, அவர் அமைதியாகவும், மென்மையாகவும் இருப்பார் (ஏசாயா 42:2). மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களை, காயமடைந்தவர்களை மென்மையாகவும் பொறுமையாகவும் கவனித்துக்கொள்வார் (வச. 3).

தேவன் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. காயப்பட்ட நம் இருதயங்கள் இறுதியாக குணமடையத் தொடங்கும் வரை அவற்றை எல்லா நேரங்களிலும் கவனித்துக்கொள்கிறார். அவருடைய மென்மையான, பொறுமையான அன்பின் மூலம் நாம் படிப்படியாக மீண்டும் ஒருமுறை நேசிக்கவும் நம்பவும் கற்றுக்கொள்கிறோம்.